seevagasinthamaani - 1



சீவக சிந்தாமணி. 



கடவுள் வாழ்த்து

கடவுள் வாழ்த்து


#1 சித்தர் வணக்கம்

மூவா முதலா உலகம் ஒரு மூன்றும் ஏத்த
தாவாத இன்பம் தலையாயது தன்னின் எய்தி
ஓவாது நின்ற குணத்து ஒள்_நிதி_செல்வன் என்ப
தேவாதி தேவன்-அவன் சேவடி சேர்தும் அன்றே

#2 அருகர் வணக்கம்

செம்பொன் வரை மேல் பசும் பொன் எழுத்து இட்டதே போல்
அம் பொன் பிதிர்வின் மறு ஆயிரத்து எட்டு அணிந்து
வெம்பும் சுடரின் சுடரும் திருமூர்த்தி விண்ணோர்
அம் பொன் முடி மேல் அடி_தாமரை சென்னி வைப்பாம்

#3 மாண்பமைந்த குழுவினருக்கு வணக்கம்

பல் மாண் குணங்கட்கு இடனாய் பகை நண்பொடு இல்லான்
தொல் மாண்பு அமைந்த புனை நல்லறம் துன்னி நின்ற
சொல் மாண்பு அமைந்த குழுவின் சரண் சென்று தொக்க
நல் மாண்பு பெற்றேன் இது நாட்டுதல் மாண்பு பெற்றேன்

#4 அவை அடக்கம்

கற்பால் உமிழ்ந்த மணியும் கழுவாது விட்டால்
நற்பால் அழியும் நகை வெண் மதி போல் நிறைந்த
சொற்பால் உமிழ்ந்த மறுவும் மதியால் கழூஉவி
பொற்பா இழைத்து கொளல்-பாலர் புலமை மிக்கார்

#5
முந்நீர் பிறந்த பவழத்தொடு சங்கும் முத்தும்
அ நீர் உவர்க்கும் எனின் யார் அவை நீக்குகிற்பார்
இ நீர என் சொல் பழுது-ஆயினும் கொள்ப அன்றே
பொய்ம் நீர அல்லா பொருளால் விண் புகுதும் என்பார்


#6 பதிகம்

மீன் ஏறு உயர்த்த கொடி வேந்தனை வென்ற பொற்பில்
தான் ஏறு அனையான் உளன் சீவகசாமி என்பான்
வான் ஏற நீண்ட புகழான் சரிதம் தன்னை
தேன் ஊற நின்று தெருண்டார் அவை செப்பல் உற்றேன்

#7
கோடாத செங்கோல் குளிர் வெண்குடை கோதை வெள் வேல்
ஓடாத தானை உருமு குரல் ஓடை யானை
வாடாத வென்றி மிகு சச்சந்தன் என்ப மன்னன்
வீடாத கற்பின் அவன் தேவி விசயை என்பாள்


#8
சேந்து ஒத்து அலர்ந்த செழும் தாமரை அன்ன வாள் கண்
பூம் தொத்து அலர்ந்த பசும் பொன் கொடி அன்ன பொற்பின்
ஏந்து ஒத்து அலர்ந்த முலையின் அமிர்து அன்ன சாயல்
வேந்தற்கு அமுதாய் விளையாடுதற்கு ஏது வாமே

#9
கல்லார் மணி பூண் அவன் காமம் கனைந்து கன்றி
சொல்லாறு கேளான் நனி சூழ்ச்சியில் தோற்றவாறும்
புல்லார் புகல பொறி மஞ்ஞையில் தேவி போகி
செல் ஆறு இழுக்கி சுடுகாடு அவள் சேர்ந்தவாறும்

#10
நாள் உற்று நம்பி பிறந்தான் திசை பத்தும் நந்த
தோள் உற்று ஓர் தெய்வம் துணையாய் துயர் தீர்த்தவாறும்
கோள் உற்ற கோன் போல் அவன் கொண்டு வளர்த்தவாறும்
வாள் உற்ற கண்ணாள் மகன் வாழ்க என நோற்றவாறும்

#11
நெஞ்சம் புணையா கலை மா கடல் நீந்தி ஆங்கே
வஞ்சம் மறவர் நிரை வள்ளல் விடுத்தவாறும்
விஞ்சைக்கு இறைவன் மகள் வீணையில் தோற்றவாறும்
நஞ்சு உற்ற காம நனி நாகரில் துய்த்தவாறும்

#12
முந்நீர் படு சங்கு அலற முரசு ஆர்ப்ப மூதூர்
செந்நீர் கடியின் விழவாட்டினுள் தேம் கொள் சுண்ணம்
மை நீர் நெடும் கண் இரு மங்கையர் தம்முள் மாறாய்
இ நீர் படியேம் இவை தோற்றனம் என்றவாறும்

#13
சுண்ணம் உடைந்து சுரமஞ்சரி சோர்ந்து தோழி
வண்ணம் நெடும் கண் குணமாலையை வைது மாறி
புண் மேல் புடையில் புகைந்து ஆண் உரு யாதும் நோக்காள்
கண் நோக்கு உடைந்து கடி_மாடம் அடைந்தவாறும்

#14
பொன் துஞ்சு மார்பன் புனல் ஆட்டிடை புன்கண் எய்தி
நின்று எஞ்சுகின்ற ஞமலிக்கு அமிர்து ஈந்தவாறும்
அன்றை பகலே குணமாலையை அச்சுறுத்த
வென்றி களிற்றை விரி_தார்_அவன் வென்றவாறும்

#15
தேன் ஊறு தீம் சொல் குணமாலையை சேர்ந்தவாறும்
கோன் ஊறு செய்வான் கருதி சிறை கொண்டவாறும்
வான் ஆறு இழிந்து மழை மின் என வந்த ஓர் தேவன்
ஊன் நாறு ஒளி வேல் உரவோன் கொண்டு எழுந்தவாறும்

#16
தேங்காத மள்ளர் திரள் தோள் இணை சிக்க யாத்த
பூம் கச்சு நீக்கி பொறி மாண் கலம் நல்ல சேர்த்தி
நீங்காத காதல் உடையாய் நினைக்க என்று பின்னும்
பாங்கு ஆய விஞ்சை பணித்து ஆங்கு விடுத்தவாறும்

#17
பை நாக பள்ளி மணி வண்ணனின் பாயல் கொண்டு
கை நாகம் துஞ்சும் கமழ் காந்தள் அம் சாரல் போகி
மை நாக வேலி மணி பல்லவ தேயம் நண்ணி
கொய் நாக சோலை கொடி அ நகர் புக்கவாறும்

#18
அத்தம் அனைய களிற்று அ நகர் மன்னன் மங்கை
முத்தம் உரிஞ்சும் முகிழ் மென் முலை மின் அனாளை
பைத்து அங்கு ஓர் நாகம் பனி மா மதி என்று தீண்ட
சித்தம் குழையற்க என தீர்த்து அவள் சேர்ந்தவாறும்

#19
பொன் பூண் சுமந்த புணர் மெல் முலை கோடு போழ
நல் பூம் கழலான் இரு திங்கள் நயந்தவாறும்
கல் பாடு அழித்த கன மா மணி தூண் செய் தோளான்
வெற்பு ஊடு அறுத்து விரைவின் நெறி கொண்டவாறும்

#20
தள்ளாத சும்மை மிகு தக்க நல் நாடு நண்ணி
விள்ளா விழு சீர் வணிகன் மகள் வேல் கண் நோக்கம்
உள் ஆவி வாட்ட உயிர் ஒன்று ஒத்து உறைந்தவாறும்
கள் ஆவி நாறும் கமழ் கோதையின் போயவாறும்

#21
இன் நீர் அமிர்து அன்னவள் கண் இணை மாரி கற்ப
பொன் ஊர் கழலான் பொழி மா மழை காடு போகி
மின் நீர் வெள் வேலவன் மத்திம தேய மன்னன்
கொன் ஊர் கொடு வெம் சிலை கண்டு எதிர்கொண்டவாறும்

#22
திண் தேர் அரசர் திறல் சிங்கங்கள் வில்லும் வாளும்
கண்டு ஆங்கு உவந்து கடி பெய்து இவண் காத்தும் என்று
கொண்டார் குடங்கை அளவே உள கண்ணினாளை
புண் தாங்கு எரி வேல் இளையோற்கு புணர்த்தவாறும்

#23
மதியம் கெடுத்த வய மீன் என தம்பி மாழாந்து
உதிதற்கு உரியாள் பணியால் உடன் ஆயவாறும்
நிதியின் நெறியின் அவன் தோழர் நிரந்தவாறும்
பதியின் அகன்று பயந்தாளை பணிந்தவாறும்

#24
கண் வாள் அறுக்கும் கமழ்_தார்_அவன் தாயொடு எண்ணி
விண் வாள் அறுக்கும் நகர் வீதி புகுந்தவாறும்
மண் மேல் விளக்காய் வரத்தில் பிறந்தாள் ஓர் கன்னி
பெண் ஆர் அமிர்தின் பெரு வாரியுள் பட்டவாறும்

#25
துஞ்சா மணி பூண் சுரமஞ்சரி என்னும் நாமத்து
அம் சாயல் பூத்த அகிலார் துகிலாய் பொன் அல்குல்
எஞ்சாத இன்ப கொடி தாழ்த்ததும் பன்றி எய்து
நஞ்சு ஊறும் வேலான் பகை நாம் அற கொன்றவாறும்

#26
புண் தோய்த்து எடுத்த பொரு வேல் என சேந்து நீண்ட
கண் போன்ற மாமன் மகள் கண் மணி பாவை அன்ன
பெண் பால் அமிர்தின் நலம் பெற்றதும் பொற்ப செங்கோல்
தண் பால் மதி தோய் குடை தண் நிழல் பாயவாறும்

#27
திறை மன்னர் உய்ப்ப திரு நிற்ப செங்கோல் நடப்ப
குறைவு இன்றி கொற்றம் உயர தெவ்வர் தேர் பணிய
உறைகின்ற காலத்து அறம் கேட்டு உரும் உற்ற பாம்பின்
அறிவன் அடி கீழ் அரசு அஞ்சி துறந்தவாறும்

#28
கோணை களிற்று கொடி தேர் இவுளி கடல் சூழ்
வாள் மொய்த்த தானை அவன் தம்பியும் தோழன்மாரும்
பூண் மொய்த்த பொம்மல் முலையாரும் புலம் துறப்ப
வீணை கிழவன் விருந்து ஆர் கதி சென்றவாறும்

#29
தேன் வாய் உமிழ்ந்த அமிர்து உண்டவன் போன்று செல்வன்
வான் வாய் வணக்கும் நலத்தார் முலை போகம் வேண்டான்
ஏனோரும் ஏத்த அவன் எய்திய இன்ப வெள்ளம்

ஈனோர்க்கு உரைப்பாம் பதிகத்துள் இயன்றவாறே

No comments:

Post a Comment